×

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பஸ்களில் முன்னறிவிப்பு இல்லாமல் கட்டண உயர்வு ஒரே ஊருக்கு வெவ்வேறு கட்டணம்

திருவண்ணாமலை, ஜூன் 12: அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட பஸ்களில், முன்னறிவிப்பு இல்லாமல் உயர்த்தப்பட்ட கட்டணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இரு மடங்கு கட்டண உயர்வை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு திடீரென அறிவித்தது. டீசல் விலையேற்றம், பராமரிப்பு செலவு காரணமாக இந்த கட்டண உயர்வு என தெரிவித்தது. அதனால், பஸ் பயணம் மேற்கொள்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், விழுப்புரம் கோட்ட அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படுவதும், ஒரே ஊருக்கு ஒவ்வொரு பஸ்சிலும் வெவ்வேறு விதமான கட்டணம் நிர்ணயிப்பதும் என அதிரடி நடவடிக்கைகள் நடந்து வருவது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில், சமீபத்தில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, டவுன் பஸ்களில் ஒரு ஸ்டேஜுக்கு, 7 என்பதை 8ஆகவும், 10 என்பதை 11 ஆகவும் உயர்த்தியுள்ளனர். டவுன் பஸ்களில் அதிகபட்ச கட்டணம் 18 என்று இருந்ததை, ₹20ஆக மாற்றியுள்ளனர்.

சேலம்-காஞ்சிபுரம் இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகளில், செய்யாறு-திருவண்ணாமலைக்கு ₹86 என்று இருந்த கட்டணம், ₹96ஆகவும், திருவண்ணாமலை-செங்கத்திற்கு, ₹30 என்று இருந்த கட்டணம் ₹32ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பெரும்பாலான வழித்தடங்களில் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், சாதாரண பஸ், டீலக்ஸ் பஸ், எக்ஸ்பிரஸ், 1 டூ 5, அல்ட்ரா டீலக்ஸ் என அரசு பஸ்களின் பெயர்களை மாற்றி, ஒவ்வொரு பஸ்சுக்கும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எந்த பஸ்சில், என்ன கட்டணம் என தெரியாமல் மக்கள் பயணம் செய்ய தயங்குகின்றனர். எனவே, விழுப்புரம் கோட்ட அரசு பஸ்களில் முன்னறிவிப்பு இல்லாமல் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். பஸ் கட்டணத்தை பழையபடி மாற்றி அமைக்காவிட்டால், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

Tags : district ,Tiruvannamalai ,fee hike ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே...