திருச்சி, ஜூன் 11: போக்குவரத்து இடையூறை தடுக்க நடவடிக்கை அண்ணாநகர் சிவபிரகாசம் சாலையில் உள்ள அறிவியல் பூங்காவில் கட்டண பார்க்கிங் வசதி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. திருச்சி மாநகராட்சி, கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் அண்ணாநகர் சிவபிரகாசம் சாலையில் அறிவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு பொதுமக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூங்காவுக்கு வாகனங்களில் வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதை தவிர்க்கும் விதமாக பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பூங்காவின் உட்புறத்தில் நிறுத்துவதற்கு மாநகராட்சி சார்பில் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பூங்கா திறந்திருக்கும் நேரம் வரை வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு, இரு சக்கர மிதிவண்டி ஒன்றுக்கு ரூ.5ம், இரு சக்கர மோட்டார் வாகனத்திற்கு ரூ.10ம், ஆட்டோவுக்கு ரூ.15ம், கார் ஒன்றுக்கு ரூ.20ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நாளை (12ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறின்றி பூங்காவிற்குள் வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்திற்குரிய கட்டணம் செலுத்தி நிறுத்தி வைக்க ஒத்துழைப்பு தரவேண்டும். கட்டணத்தொகை மாநகராட்சி மூலம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருக்கிறார். மைக்ரோ பைனான்ஸ்களை தடை செய்ய வேண்டும்