×

3 நாட்கள் தெப்ப திருவிழா நடக்கிறது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்பம் அமைக்கும் பணிகள் மும்முரம்

திருவாரூர், ஜூன் 11: திருவாரூரில் தியாகராஜசுவாமி கோயிலின் தெப்ப திருவிழாவானது வரும் 14,15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுவதையொட்டி தெப்பத்திற்கான கோபுரம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வரும் இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது.
இதேபோல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் இருந்துவருகிறது.

கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர விழாவில் ஆழி தேரோட்ட விழாவும் பின்னர் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆழித்தேரோட்ட விழாவானது கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி நடைபெற்ற நிலையில் தெப்ப திருவிழாவானது வரும் 14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கோயிலைப் போன்றே 5 வேலி பரப்பளவினை கொண்ட இந்த குளத்தில் பல வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பமானது இரவையும் பகலாக்கும் வகையில் குளத்தினை சுற்றி வரும் காட்சியானது பக்தர்களுக்கு கண்கொள்ள காட்சியாக இருக்கும்.

அதன்படி தற்போது தெப்பம் அமைக்கும் பணியானது கமலாலய குளத்தில் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு அடுக்குக்கு 216 பேரல்கள் மூலம் மொத்தம் 2 அடுக்குகளுக்கு 432 பேரல்களை கொண்டு 7 அடி உயரத்தில் சுமார் 600 பேர் அமரும் வகையில் தெப்பம் அமைக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. நேற்று கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும் நாள் ஒன்றுக்கு 3 சுற்றுகள் வீதம் இசை கச்சேரிகளை கொண்டு நடைபெறும் இந்த தெப்ப திருவிழாவானது தினந்தோறும் மாலை 6 மணி துவங்கி இரவு 9 மணி வரையிலும், 10 மணி துவங்கி 1 மணி வரையிலும், 2 மணி துவங்கி அதிகாலை 5 மணி வரையிலும் என 3 சுற்றுகளாக சுற்றி வருவது வழக்கம். இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் கவிதா தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Tappa ,Tiruvarur Thyagaraja Swamy ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...