×

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உடல் மீட்பு

திண்டிவனம், ஜூன் 11:  திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் மகன் துரைராஜ்(26). இவர் சென்னையில்  ஷாமினா பந்தல் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரசிகா என்ற மனைவியும், ஆறுமாத கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வயல்வெளிக்கு துரைராஜ் வந்துள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சிட்டிபாபு என்பவர் தரைகிணற்றில் கால்தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார். உறவினர்கள் இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை 10 மணி அளவில் கிணற்றில் துரைராஜ் சடலமாக கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் துரைராஜ் உறவினருக்கும்,   காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த அருணகிரிதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி துரைராஜின் உடலை மீட்டனர். போலீசார், துரைராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : youth fall victim ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை