×

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கூட்டுறவு கடன் சங்க தேர்தல்

பொன்னமராவதி, ஜூன் 11: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுவு கடன் சங்கத்திற்கான தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. கடந்த ஆண்டு அனைத்து கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெற்றது. அப்போது வேந்தன்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கான தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் இருவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்றம் சென்றதால் அப்போது தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தேர்தல் பணிகள் கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டது. ஏற்கனவே 32பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதில் இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 30பேர் களத்தில் இருந்தனர். இதில் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் நடப்புத் தலைவராக இருந்த மலைச்சாமி உள்ளிட்ட 29பேர் போட்டியில் உள்ளனர்.
இதனையடுத்து நேற்று (10ம் தேதி) இதற்கான தேர்தல் நடந்தது. அறந்தாங்கி கூட்டுறவு சார்பதிவாளர் அன்னலெட்சுமி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் 15 தேர்தல் அலுவலர்கள் பணியாற்றினர். இச்சங்கத்திற்கான தேர்தலில் வாக்களிக்க 3126பேர் வாக்காளர்களாக உள்ளனர். 11பேரை தேர்வு செய்ய 29பேர் களத்தில் உள்ளதால் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மொத்தம் 458 வாக்குகள் பதிவாகியுள்ளது. 3126 வாக்காளர்களில் 458 வாக்காளர் மட்டுமே வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கை இன்று (11ம் தேதி) நடக்கிறது.

Tags : election ,Vandanpatti Cooperative Credit Association ,Ponnamaravathi ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...