பொன்னமராவதி, ஜூன் 11:அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் திரளான பக்தர்கல் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்தது. வருடம்தோறும் அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அன்றே சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டது. அன்று முதல் தினசரி மண்டகப்படி நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து இந்த கோயிலின் முக்கிய விழாவான பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது. அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, ஆலவயல், அம்மாபட்டி, ஆவிகோன்பட்டி, கருமங்காடு, கண்டியாநத்தம் உட்பட் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து பொங்கலிட்டு கோழி, கிடாய் வெட்டி வழிபாடு செய்தனர்.