புதுக்கோட்டை, ஜூன் 11: புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் முன்பு நேற்று 2வது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் டிஎஸ்பி ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முதல் முறையாக கடந்த மே மாதம் 3ம் தேதி பொதுமக்கள் சாலை மறியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.