×

வேதாரண்யம் தாலுகாவில் முந்திரி கொட்டை விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

வேதாரண்யம், ஜூன் 11: வேதாரண்யம் தாலுகாவில் முந்திரிக்கொட்டை விளைச்சல் குறைவாக இருந்தும் சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வேதாரண்யம் பகுதியில் கஜா புயலுக்கு பிறகு தப்பி பிழைத்த முந்திரி மரங்கள் தற்போது ஒரு சில மரங்கள் காய்க்க துவங்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் வேதாரண்யம் தாலுகா முழுவதும் கடுமையாக முந்திரிமரங்கள் பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள பணபயிர்களான மா, தென்னை, முந்திரி, சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. இதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருமானத்திற்கு வழிஇல்லாத நிலையில் உள்ளனர். வேதாரண்யம் தாலுகாவில் செட்டிபுலம், கரியாப்பட்டினம், வெள்ளப்பள்ளம், செம்போடை, புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். விவசாயிகளின் ஆண்டு வருமானத்திற்கு முந்திரி ஒரு முக்கிய காரணமாகும்.

கஜா புயலால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த முந்திரிமரங்கள் வேருடன் சாய்ந்து விட்டது. புயலில் தப்பிய ஒரு சில மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் தற்போது காய்ப்பதற்கு துவங்கி உள்ளது. ஒரு சில முந்திரிமரங்கள் காய்த்து இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முந்திரிக்கொட்டைகள் சென்ற ஆண்டு கிலோ ரூ.120 முதல் 150 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மிக குறைந்த அளவில் முந்திரி காய்த்திருந்தாலும் அதற்கு சரியான விலை இல்லை. தற்போது கிலோ ரூ. 80 மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே இந்த முந்திரி விவசாயத்தின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து முந்திரி வியபாரி ரெத்தினவேலு கூறியதாவது: வேதாரண்யம் பகுதியில் கஜா புயலினால் முந்திரி மரங்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது. இருக்கும் மரங்கள் ஓரளவு காய்த்தாலும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முந்திரிகொட்டை வராததால் இந்த ஆண்டு விலை வீழ்ச்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags : Vedaranyam Taluka ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்