ராமநாதபுரம், ஜூன் 11: ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தீவுகளில் பாரம்பரிய மீன் பிடித்தலை தடை செய்யக் கூடாது என மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ராமேஸ்வரம் பகுதியில் குருசடை தீவு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட தீவுகளை சுற்றுலா தீவுகளாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தீவுகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாக்கும் வகையில் எல்லையை குறியிட்டு மிதவைப் பந்துகளும் மிதக்க விடப்பட்டுள்ளன. மிதவைப் பந்துகள் மிதக்க விட்டதால் தங்களது பாரம்பரிய தொழிலான மீன் பிடித்தலை தடை செய்ய வனத்துறை திட்டமிடுவதாக மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஏராளமான மீனவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் செய்வதை அறிந்த கலெக்டர் வீரராகவ ராவ் அமைப்பின் தலைவர் பால்சாமி உள்ளிட்ட மீனவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மீனவர்கள் பிரச்னையைத் தீர்க்க வருவாய்த் துறை, மீன்வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவர் என தெரிவித்ததால் மீனவர்கள் கலைந்து சென்றனர்.