×

இடைப்பாடி பகுதிகளில் வாக்காளர்களுக்கு திமுக எம்பி நன்றி தெரிவிப்பு

இடைப்பாடி, ஜூன் 11: சேலம் நாடாளுமன்ற தொகுதி எம்பி பார்த்தீபன், நேற்று இடைப்பாடி நகரப்பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி  தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு, சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்  எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். மூப்பனூர், நாச்சிப்பாளையம், வெள்ளநாயக்கன்பாளையம்,  ஆவணியூர் கோட்டை, தாவாந்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பார்த்தீபன் எம்பி வாக்காளர்களை சந்தித்து  நன்றி தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘முதல்வர் எடப்பாடி  பழனிசாமி சொந்த தொகுதியிலும், அவரின் சொந்த கிராமத்திலும் அதிக வாக்குகள்  அளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர், முதியோர், விதவைகள்  உள்ளிட்ட அனைவரது மனுக்களை பெற, சேலம் மற்றும் எடப்பாடியில் மக்கள்  சந்திப்பு அலுவலகம் திறக்கப்பட்டு, அதன் மூலம் உடனடி நடவடிக்கை  எடுக்கப்படும். குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தளபதி ஸ்டாலின் குடிநீர் விநியோக  திட்டத்தில், லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது,’ என்றார். இடைப்பாடி நகர  பகுதிகளில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி  500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

அவர்களை மாவட்ட திமுக செயலாளர்  எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் பார்த்தீபன் எம்பி சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், நெசவாளரணி  மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், இடைப்பாடி நகர செயலாளர் பாஷா, நகர  அவைத்தலைவர் மாதையன், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேலு, சிங்காரவேலு,  ராமலிங்கம், நகர துணை செயலாளர் வடிவேலு, சாமியப்பன், நகர இளைஞரணி  அமைப்பாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் மாதேஸ்வரன், திருமுருகன்,  கருப்புவைரம், ரவி, மணி கலந்து கொண்டனர்.

Tags : voters ,DMK ,constituencies ,
× RELATED மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில்...