வத்தலக்குண்டு, ஜூன் 11: வத்தலக்குண்டுவில் மின்வாரிய ஊழியர் வீடு புகுந்து மர்ம ஆசாமி 10 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு வெங்கிடாபட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு நாகலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகள் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டார். மகன் வெளியூரிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் முருகேசனும், அவரது மனைவி நாகலெட்சுமியும் வீட்டின் கீழ்த்தளத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். முருகேசனின் தாயார் மாடியில் தூங்கி கொண்டிருந்தார்.
அதிகாலை 4 மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் திறந்திருந்த மாடி கதவு வழியாக வீட்டில் புகுந்து கீழே படுத்திருந்த நாகலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை லாவகமாக பறித்து கொண்டு மாடி ஏறி தப்பினார். அப்போது முருகேசனின் தாயார் கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளோர் வருவதற்குள் மர்ம ஆசாமி தப்பி ஓடிவிட்டார். இச் சம்பவம் குறித்து முருகேசன் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து செயினை பறித்து தப்பி ஓடிய மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.