×

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திருவள்ளூர், ஜூன் 11: கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த நரசிங்கபுரம் கிராம மக்கள், 100க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது நரசிங்கபுரம் கிராமம். இக்கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, கூவம் ஆற்றுப்படுகையில் போர்வெல் அமைத்து, மேல்நிலை தேக்கத் தொட்டியில் சேமித்து, பின்னர் குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. விசாரித்தபோது, குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறு வற்றி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை.

இதனால், நெடுஞ்சாலையை தாண்டி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் கொண்டுவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், காலிக் குடங்களுடன் குடிநீர் வழங்கக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
வாரந்தோறும் மக்கள் குறை தீர்வு கூட்டத்துக்கு, காலிக்குடங்களுடன் பல்வேறு கிராம பெண்கள் குடிநீர்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அதிகாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Village villagers ,office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...