காஞ்சிபுரம், ஜூன் 11: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற உள்ள அத்தி வரதர் உற்சவத்துக்காக, அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு, பைப் லைன் மூலம் காவிரி நீரை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்த சரஸ் குளத்தில், அத்தி வரதர் சயன நிலையில் உள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அத்தி வரதர் வெளியில் எடுத்து, 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் வசந்த மண்டபத்தில் வைக்கப்படுவார். இந்த வைபவம், வரும் ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது.
இந்த விழாவை காண, பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியை, அந்தந்த துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அத்தி வரதர் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது குறித்து, காஞ்சிபுரம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி கூட்டு குடிநீர் திட்டத்தில், வேலூர் மாவட்டம் அரக்கோணத்துக்கு வரும் காவிரி நீரை, காஞ்சிபுரம் எடுத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அரக்கோணத்தில் இருந்து, திருப்பாற்கடல் குழாய் வழியாக காஞ்சிபுரத்துக்கு, காவிரி நீர் எடுத்து வர உள்ளது. ஒரு நாளைக்கு, 20 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் என அரசுக்கு, நகராட்சி பரிந்துரை செய்துள்ளது. இதற்கான செலவாக, ஒரு நாளைக்கு, 1.85 லட்சம் குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டி வரும் என்றனா்.