வைகுண்டம், ஜூன் 11: நெல்லை மாவட்டம், வி.கே.புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ராமு (70). இவரது மகன் சென்னையிலும், மகள் அடையகருங்குளத்திலும் வசித்து வருகின்றனர். மனதளவில் பாதிப்புக்கு உள்ளானதாக் கூறப்படும் ராமு, வைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் கற்கள் உள்ள பகுதியில் இருந்து நேற்று அதிகாலை திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற வைகுண்டம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.