தூத்துக்குடி, ஜூன் 11: மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் முறையாக தூர்வார மேம்படுத்தக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன் மதிமுகவினர் நூதன போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் பராமரிப்பின்றி முற்றிலும் தூர்ந்துபோன அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளையும் அகற்றி முறையாகத் தூர்வாரி மேம்படுத்த வேண்டும். நீர்வரத்து பாதைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளுக்கு மழைக்காலங்களில் தடையின்றி தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மதிமுகவினர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பாக நேற்று நூதன போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதன்படி மண்வெட்டி, கடப்பாரை, மண் அள்ளும் சட்டி என தூர் வாருவதற்கு உதவும் அனைத்துப்பொருட்களையும் கையோடு கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாநகரச் செயலாளர் முருகபூபதி தலைமை வகித்தார். மீனவர் அணி செயலாளர் நக்கீரன், ஒன்றியச் செயலாளர்கள் வீரபாண்டி சரவணன், மணிராஜ் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற தொண்டர் அணி மாநில துணைச்செயலாளர் பேச்சிராஜ், விவசாய அணி மாவட்ட துணைச் செயலாளர் ராமச்சந்திரன், இளைஞர் அணி பாலசுப்பிரமணியன், மாணவர் அணி சரவணன், நிர்வாகிகள் தர்மம், தொம்மை, பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.