கோவில்பட்டி, ஜூன் 11: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் ரத்துசெய்யக் கோரி கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். 2018-19ம் ஆண்டில் படைப்புழு தாக்குதலால் சேதமடைந்த மக்காச்சோளம், பாசி, உளுந்து பயிர்களுக்கு அரசு அறிவித்த நஷ்டஈடு தொகையை வழங்க வேண்டும். கிராமப்புற ஊரணிகளில் வண்டல்மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு நிரந்தர அனுமதி அளிக்க வேண்டும். இளையரசனேந்தல் பிர்க்காவிற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளை கோவில்பட்டி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன், கல்விக் கடன், நகை கடன் உள்ளிட்ட அனைத்துக்கடன்களையும் ரத்துசெய்ய வேண்டும். வறட்சி பாதித்த மாவட்டமாக தூத்துக்குடியை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. வட்டார தமிழக விவசாயம் சங்கம் சார்பில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில் தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.பின்னர் கோரிக்கை மனுவை ஆர்.டி.ஓ. அமுதாவிடம் வழங்கினர். அப்போது அவர் இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகே விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.