நெல்லை, ஜூன் 11: வண்ணார் சமுதாய அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து சூரியகுலத்தோர் என சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி நெல்லையில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு வண்ணார் சமுதாய முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாவூதன் தலைமை வகித்தார். நலச்சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன், அமைப்பாளர் பேச்சிமுத்து, ஆலோசகர் இசக்கிமுத்து, பொருளாளர் பிரமநாயகம், இளைஞரணி தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மணிபாபா, சட்ட ஆலோசகர் கதிர்வேல், மாநில பொருளாளர் செல்வராஜ் ஆகிேயார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது வண்ணார் சமுதாயத்தை எம்பிசி பட்டியலில் இணைத்து 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சலவை தொழிலாளர்கள் அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து சூரியகுலத்தோர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சலவை தொழிலாளர்களுக்கு அரசு, இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் செந்தில்குமார், மகளிரணி ஜனகை மாரி, கொள்கை பரப்பு செயலாளர் முத்து, சுந்தரி மற்றும் காசி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.