திருச்செந்தூர், ஜூன் 7: திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டின் துவக்கநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு துவக்க விழா நடந்தது. இதையொட்டி பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு தாளாளர் ராமச்சந்திரன் இனிப்பு மற்றும் தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கி வரவேற்றார். விழாவில் தலைமை ஆசிரியை உஷா, ஆசிரியர்கள் ஜார்ஜ்ராஜ், அந்தோணி சேவியர் ராஜா, சாந்தி, விமலாபீரீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.