×

இளம்பெண் தூக்கு போட்டு சாவு

பாகூர், ஜூன் 7: பாகூர் அருகே சட்னி அரைப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவரிடம் கோபித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகூர் அருகே சேலியமேடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவரது மனைவி சந்தானலட்சுமி (34). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சந்தானலட்சுமி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சந்தானலட்சுமி வேலைக்கு சென்றுவிட்டு வந்து வீட்டில் தோசை ஊற்றியுள்ளார். அப்போது ரமேஷ் அவரிடம் சட்னி அரைத்துவிட்டு தோசை ஊற்றினால் குழந்தைகள் சாப்பிடுமே என கேட்டுள்ளார். அதற்கு சந்தானலட்சுமி நீ சட்னி அரைக்க வேண்டியதுதானே என கணவரிடம் கூறியுள்ளார். பின்னர் உள்ளே சென்ற சந்தானலட்சுமி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறிது நேரம் கழித்து உள்ளே சென்ற ரமேஷ் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர் சந்தானலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Death ,teenager ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு