ஆத்தூர், ஜூன் 7: ஆத்தூர்-சேலம் வழியே ஏத்தாப்பூர் மற்றும் புத்திரகவுண்டன் பாளையத்திற்கு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெத்தநாயக்கன்பாளைம் தாலுகா புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர் உள்ளிட்ட ஊர்கள் சேலம்-ஆத்தூர் வழித்தடத்தில் உள்ள முக்கிய பகுதிகளாகும். இந்த ஊர்களுக்கு செல்ல சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வீஸ் சாலை வழியாக சேலம்-ஆத்தூர் பேருந்துகள் வந்து செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் வழியாக சென்று விடுகின்றன.
இதனால் புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, ஆத்தூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் ஜெயகௌரியிடம், பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், சேலம்-ஆத்தூர், வழிதடத்தில் இயக்கப்படும் பஸ்கள், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர் நிறுத்தத்திற்கு வராமல், நேரடியாக மேம்பாலம் வழியாக செல்வதால் புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர் செல்லும் பயணிகள் பஸ் வசதியின்றி தவிக்கின்றனர். எனவே, புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர் பேருந்து நிறுத்தப்பகுதிக்கு பஸ்களை இயக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.