காடையாம்பட்டி, ஜூன் 7: காடையாம்பட்டி அருகே, வழித்தட பிரச்னையில் டிராக்டரை அடித்து நொறுக்கிய விவகாரத்தில், வழக்கு பதிவு செய்ய பெண் எஸ்ஐ மறுப்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காடையாம்பட்டி அருகே, டேனிஷ்பேட்டையை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ். இவர் வாங்கிய விவசாய நிலத்தில், தங்களுக்கு வழித்தடம் தர வேண்டும் என கேட்டு, அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், பழனிசாமி ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். கடந்த 3ம் தேதி தோட்டத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்த போது, அங்கு வந்த கோவிந்தன், பழனிசாமி, மணி, வெங்கடேசன் மற்றும் பலர், விவசாயி வெங்கடேசனை அடித்து உதைத்து, டிராக்டரை உடைத்து சேதப்படுத்தினர். இதை தடுக்க வந்த வெங்கடேசனின் மனைவி கோமதி, அவரது தந்தை எட்டியாகவுண்டர், தாய் மணி ஆகியோரையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், இருதரப்பினர் மீது எஸ்ஐ கல்பனா வழக்கு பதிவு செய்துள்ளார். ஆனால், டிராக்டர் அடித்து நொறுக்கப்பட்டதை குறிப்பிடாமல், சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்யவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ஓமலூர் டிஎஸ்பியிடம் புகார் அளித்தனர். அவர் உத்தரவிட்டு 4 நாட்களான பின்னரும், ஒரு தரப்பினருக்கு சாதகமாக எஸ்ஐ செயல்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். அடித்து நொறுக்கப்பட்ட டிராக்டர், ஒரு வார மாக அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.