நாமக்கல், ஜூன் 7: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரி வளாகத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் சிறப்பு மையம் திறப்பு விழா, கல்லூரி தலைவர் பாரத்குமார் தலைமையில் நடைபெற்றது. பெங்களூரு மைன்ட் ட்ரீ செயல் துணைத் தலைவர் பார்த்தசாரதி மற்றும் பெங்களூரு நெக்ஸ்ட் வெல்த் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனர் ஸ்ரீதர் மிட்டா ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர் பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவு இயந்திர மொழி கற்றல், இண்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இனிவரும் ஆண்டுகளில் கணினி சார் நிறுவனங்கள், வேளாண்மை, உயிர் மருத்துவ இயல், மெக்கட்ரானிக்ஸ் சார்ந்த தொழில் நிறுவனங்களில், இந்த செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த திறன்களை மேம்படுத்த இதுபோன்ற திறன் வளர்ச்சி சிறப்பு மையங்கள் உதவிபுரியும்,’ என்றார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் மாதேஸ்வரன் பேசினார். விழாவில் துரை டோட்லா, அஜய் அகர்வால், ராம்பிரசாத் ராமண்ணா, மஹேந்ரா குழும கல்லூரி முதல்வர்கள், புலமுதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர் வினய் மகாஜன் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.