ராஜபாளையம், ஜூன் 7: ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பாதாளச்சாக்கடை பணிகளுக்கு சாலைகளை தோண்டி போட்டுள்ளதால், நேற்று பெய்த சாதாரண மழைக்கே சாலைகள் குளமாக மாறியுள்ளன. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ராஜபாளையத்தில் நேற்று லேசான மழை பெய்தது. இதன் காரணமாக தெருக்கள் மற்றும் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. ராஜபாளையத்தில் கடந்த சில மாதங்களாக பாதாளச் சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் கிடக்கிறது.
இந்த பள்ளங்களில் நேற்று பெய்த மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது. மக்கள் கூறுகையில், பாதாளச்சாக்கடை பணிகள் சில இடங்களில் முடிந்த நிலையிலும் சாலையை சரி செய்யாமல் உள்ளனர். இதன் காரணமாக ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆங்காங்கே மழை நீர் தேங்குவதால் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்லக் கூட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே பணிகள் நடைபெற்று முடிந்த இடங்களில் உடனடியாக சாலைகளை சரி செய்ய வேண்டும். நகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.