×

தனியார் ஆலையின் கழிவுநீர் கடலில் கலப்பதால் அரியவகை உயிரினங்கள் அழியும் ஆபத்து

சாயல்குடி, ஜூன் 7:  சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் தனியார் உப்பு சுத்திகரிப்பு ஆலை, புரோமின் உலோகம் தயாரிப்பு ஆலையின் கழிவுநீர் நேரடியாக கடலுக்கு செல்வதால், கடல் மாசடைந்து அரியவகை உயிரினங்கள், பறவைகள் சரணாலய பறவைகள் அழியும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் மாரியூர்-வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் அருகே 3க்கும் மேற்பட்ட வெளிமாநில தனியார் உப்பு நிறுவனங்கள், உப்பு சுத்திகரிப்பு நிலையம், புரோமின் உலோகம் தயாரிப்பு தொழிற்சாலை போன்றவை உள்ளது. இந்த தனியார் நிறுவன தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கடலுக்குள் விடுவதால் கடல் மாசடைந்து அரியவகை உயிரினங்கள், அருகில் இறைதேடும் பறவைகள் சரணாலய பறவைகள் அழியும் அபாயம் உள்ளது, புகையால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

அப்பகுதியினர் கூறும்போது, ‘‘வாலிநோக்கம் அரசு உப்பளத்தில் 100க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 1350 ஒப்பந்த பணியாளர்களும், 500க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். அருகிலுள்ள வாலிநோக்கம், தனிச்சியம், கிருஷ்ணாபுரம், சேரந்தை, கீழக்கிடாரம், சேனாங்குறிச்சி, குசவன்குளம், கொந்தங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்களும் உள்ளன. அருகிலுள்ள வாலிநோக்கம், மாரியூர் கடல், மன்னார் வளைகுடா உயிர்கோள கடல் என்பதால், இதில் அரியவகை பவளபாறைகள், திமிங்கலம், கடல்பசு, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் உள்ளன.

அருகில் மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் உள்ளது. தண்ணீரின்றி கண்மாய், மரங்கள் வறண்டு காணப்படுவதால், அங்குள்ள பறவைகள் இடம்பெயர்ந்து இப்பகுதி தரவை(கடல்)யில் இறைத்தேடி, இப்பகுதியிலுள்ள வனத்துறை காடுகளில் தஞ்சமடைகின்றது. இந்நிலையில் இப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனங்களின் உப்பு சுத்திகரிப்பு ஆலை(பாலிஷ்) புரோமின் உலோகம் தயாரிப்பு ஆலை போன்றவற்றின் கழிவு நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கடலுக்குள் விடுகின்றனர். இதனால் கடல் மாசடைந்து கடல் வாழ்உயிரினங்கள், பறவைகள் அழியும் அபாயம் உள்ளது. மேலும் மாலை நேரத்தில் இதிலிருந்து வெளியேறும் புகையால் இப்பகுதி பொதுமக்கள், வாலிநோக்கம் கடல், தர்ஹாவிற்கு வரும் சுற்றுலாபயணிகள், அரசு உப்பள தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆலையின் கழிவுநீரை கடலுக்குள் விடுவதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : factory ,sea ,
× RELATED தெலங்கானாவில் வேதித் தொழிற்சாலையில்...