பழநி, ஜூன் 7: பழநி அருகே கோதைமங்கலத்தில் சண்முகாநதி ஆற்றங்கரையில் பெரியாவுடையார் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயிலில் கும்பாபிஷேக தினமான நேற்று வருடாபிஷேகம் நடந்தது. முன்னதாக கலச பூஜை, விநாயகர் பூஜை, பூர்ணாகுதி மற்றும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலசம் கோயிலின் பிரகாரங்களில் சுற்றிவரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கலச நீர் பெரியாவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் தலைமையிலான குருக்கள் பூஜைகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.