மேட்டுப்பாளையம் : உதகை மலை ரயில் என்ஜின்களும் நூற்றாண்டு பழமை வாய்ந்தவை. அனைத்து என்ஜின்களும் ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டவை. என்ஜின் பழமையானதால் புதிய நிலக்கரியால் இயங்கும் என்ஜின்கள் உள்நாட்டிலேயே தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து ரயிலுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள் அனைத்தும் கோவை மாநகரில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக பழமை மாறாமல் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ரூ.9 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட மலை ரயில் என்ஜின் நேற்று மேட்டுப்பாளையம் வந்தது. 50 டன் எடை கொண்ட மலை ரயில் என்ஜின் தலா இரு ராட்சத கிரேன் மூலம் இருப்பு பாதையில் இறக்கி வைக்கப்பட்டது. இந்த பணியில் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபட்டனர்.இது குறித்து ரயில்வே துறையினர் கூறுகையில்,“உதகை மலை ரயிலில் பயன்படுத்தப்பட்ட பழைய என்ஜின்களை திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் கொண்டு சென்று அங்கு பர்னஸ் ஆயில் மூலமாக இயங்கும் விதத்தில் புதுப்பித்து அந்த என்ஜின்களை கொண்டு தான் தற்போது மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.முதல் முறையாக நிலக்கரியால் இயங்கக்கூடிய மலை ரயில் என்ஜின் முழுக்க முழுக்க இந்திய உபகரணங்களை கொண்டு திருச்சி பொன்மலை ரயில்வே பொன்மலையில் தயாரிக்கப்பட்டது.முதல் நிலக்கரியால் இயக்கப்படும் என்ஜின் மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டு ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சோதனை ஓட்டத்திற்கு பின்னர் பயணிகளின் ரயில் இயக்கப்படும், ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்’’ என்றனர்….
The post நிலக்கரியால் இயங்கும் உதகை மலை ரயில் என்ஜின்-மேட்டுப்பாளையம் வந்தது appeared first on Dinakaran.