×

மரக்காணம்- திண்டிவனம் வழித்தடத்தில் கூடுதல் அரசு பஸ் இயக்காததால் படியில் பயணிக்கும் மாணவர்கள்

மரக்காணம், ஜூன் 5: மரக்காணம்- திண்டிவனம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்காததால் மாணவர்கள் பஸ் கூரை, படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மரக்காணம்- திண்டிவனம் சாலையில் கந்தாடு, சிறுவாடி, ஆலங்குப்பம், பிரம்மதேசம், வடகோட்டிப்பாக்கம், வடநெற்குணம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இவர்கள் இப்பகுதியில் இருந்து சென்னை, புதுவை உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்லவேண்டும் என்றால் மரக்காணம், திண்டிவனம் ஆகிய வழியாகத்தான் செல்லவேண்டும். இதுபோல் இப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சாதிச்சான்று, குடியிருப்பு, வருமானம் மற்றும் நிலம் சம்பந்தமான ஆவணங்கள் வாங்க வேண்டும் என்றால் திண்டிவனம், மரக்காணம் ஆகிய இடங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு தான் செல்ல வேண்டும். இதன் காரணமாக தினமும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பேருந்துகள் மூலம் பயணம் செய்கின்றனர். ஆனால் இந்த வழிதடத்தில் நான்கு அரசு டவுன் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த டவுன் பஸ்களும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நேரங்களிலும், அரசு முக்கிய பண்டிகை காலங்களிலும் இந்த வழிதடத்தில் இயக்கப்படாமல் வேறு இடங்களுக்கு மாற்றி அனுப்பப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் இந்த வழித்தடத்தில் இப்பேருந்துகள் மாதத்தில் பல நாட்கள் இயக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இதிலும் இரவு 8 மணிக்குமேல் இந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதே இல்லை என்றும் கூறுகின்றனர். இதுபோல் இப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ்கள் இருந்தும் குறித்த நேரத்தில் அரசு பேருந்துகள் இல்லாததால் அவர்களும் காசு கொடுத்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் பயணம் செய்கின்றனர். மேலும் ஒரு சில நாட்களில் மட்டும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஏறுகின்றனர். இவர்கள் பேருந்தில் போதிய இட வசதி இல்லாததால் பேருந்தின் பக்கவாட்டில் மற்றும் படிகளில் தொங்கியவாறு பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதி மாணவர்கள், பொதுமக்களின் நலன் கருதி மரக்காணம்- திண்டிவனம் வழிதடத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களை நிறுத்தாமல் குறித்த நேரத்தில் முறையாக இயக்க வேண்டும். மேலும் இந்த வழித்தடத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : route ,Margaron-Tindivanam ,
× RELATED நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்...