கோவை, ஜூன்5: கோவை அரசு கலைக்கல்லூரி விடுதியில் மாணவர், மாணவிகள் சேருவதற்கான நேர்காணல் வரும் 7ம் தேதி நடக்கிறது. கோவை அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ளது. இதில், மாணவர்கள் விடுதியில் மொத்தம் 250 பேர் தங்கும் வசதியும், மாணவிகள் விடுதியில் 50 பேர் வரை தங்கும் வசதியும் உள்ளது. இந்நிலையில், கல்லூரியில் இளங்கலையில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடந்து முடிந்துள்ளது. இதில், 1,409 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் வசிக்கும் மாணவர்களிடம் இருந்து அரசு கல்லூரி விடுதியில் தங்கி படிக்க பெயரை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, பலர் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதற்கான நேர்காணல் வரும் 7ம் தேதி கல்லூரி விடுதியில் நடக்கிறது. முதலாமாண்டு மாணவர்கள் விடுதிக்கு 150 பேருக்கும், மாணவிகள் விடுதிக்கு 20 பேருக்கும் நேர்காணல் நடக்கிறது. நேர்காணலில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வரவேண்டும். கல்லூரியில் சேர்ந்த ஆதாரம், மாணவரின் ஆதார் கார்டு உள்ளிட்ட சான்றுகள், விடுதி கட்டணம் ரூ.8,025 கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், ரூ.3 ஆயிரம் இருப்பு தொகையாக வைக்கப்படும். மாணவர்கள் கல்லூரி விடுதி காலம் முடிந்தவுடன் இருப்பு தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும். விடுதியில் ஒரு நாளைக்கு உணவு கட்டணம் ரூ.65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.