விருதுநகர், ஜூன் 5: விருதுநகரில் உள்ள ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயிலில், வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை 4.35 மணிக்கு சாட்டுதல் நடைபெற்றது. இரவு 8.01 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் ஜூன் 11ம் தேதி பொங்கல், ஜூன் 12ம் தேதி பக்தர்களின் கயிறு குத்து, அக்னிசட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுதல் நடைபெறும்.
ஜூன் 13ம் தேதி மாலை 4.36 மணிக்கு ஸ்ரீ வெயிலுகந்தம்மன், ஸ்ரீ மாரியம்மன் இருவரும் சித்திர ரதத்தில் நகல்வலம் வரும் தேரோட்டம் நடைபெறும். ஜூன் 15ம் தேதி மாலை கொடியிறக்கம் நடைபெறும். தினசரி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இதற்கான ஏற்பாடுகளை இந்துநாடார் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.