கோவில்பட்டி, ஜூன் 5: இலவச கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இலவச கட்டாய கல்வி சட்டம் (ஆர்டிஇ) 2009ன் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த சட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மாணவ, மாணவிகளிடம் எந்தவிதமான கல்வி கட்டணமும் வசூலிக்க கூடாது என அரசாணை உள்ளது. இந்நிலையில் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இம்மாணவ, மாணவியரிடம் இப்பள்ளி நிர்வாகம் கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கட்டணமின்றி பள்ளியில் பயில உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கோவில்பட்டியில் செயல்படும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்த மனுவை கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பனிடம் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகே போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.