×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும் துணை ஜனாதிபதி வெங்கைய்யநாயுடு பேட்டி

திருமலை, ஜூன் 5: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த துணை ஜனாதிபதி வெங்கைய்யநாயுடு ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய துணை ஜனாதிபதி வெங்கைய்யநாயுடு 3 நாள் பயணமாக திருப்பதி வந்தார். திருப்பதி அருகே நேற்றுமுன்தினம் நடந்த தேசிய வானிலை ஆராய்ச்சி மைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைதொடர்ந்து அன்றிரவு திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர், நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி வெங்கைய்யநாயுடு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆண்டுக்கு ஒருமுறை ஏழுமலையானை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி தற்போது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தேன். முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இங்கு சுவாமி தரிசனத்திற்கு வரவேண்டும். இதன்மூலம் சாதாரண பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்காது. ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும். நான் அரசியலில் இல்லை. மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை. ஐக்கிய நாடுகளின் சபையில் பங்கேற்று உலக அமைதிக்காகவும், வன்முறையை ஒழிக்கவும் மக்கள் கருத்துக்களை கேட்டு அதற்கு ஏற்ப செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். தீவிரவாதம் ஒழியவும், உலக அமைதி, இயற்கை, கலாச்சாரம் பாதுகாக்கவும் சுவாமியை வேண்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் திருமலை அடுத்த தர்மகிரியில் உள்ள வெங்கடேஸ்வரா வேதபாடசாலைக்கு சென்று அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினர். பின்னர், தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்திற்கு சென்று அங்கு தனது குடும்பத்தினருடன் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் பரிமாறி அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். மாலை நாத நீரஞ்சனா மண்டபத்தில் நடந்த கலைநிகழ்ச்சியை பார்வையிட்டார். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நெல்லூர் புறப்படுகிறார்.

Tags : Swami Diwali ,Venkayanayudu ,Tirupathi Ezhumalayyan ,
× RELATED பிரதமர் நரேந்திரமோடி உரைகளின்...