பொன்னமராவதி,ஜூன் 4: பொன்னமராவதி ஒன்றியத்தில் 5 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு 108 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் 84 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 18 ஊராட்சி ஒன்றிய நடுலைப்பள்ளிகள், 6 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் இந்த ஆண்டு பயிலும் 1,2 வகுப்புகளை சேர்ந்த 1,968 மாணவ, மாணவிகள், 6.7 வகுப்புகளை சேர்நத 550 மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. நேற்று முதல் செம்பூதி, மைலாப்பூர், கொன்னையம்பட்டி, முள்ளிப்பட்டி, கீழத்தானியம் ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஒன்றியம் முழுவதும் உள்ள பள்ளிகளை இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ராஜாசந்திரன் இலவச பாடப்புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார், தலைமையாசிரியர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.