அரியலூர், ஜூன் 4: அரசு வழங்கிய இடத்துக்கு பட்டா வழங்ககோரி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மனு அளித்தனர். அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கை அடங்கிய 323 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். அதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையத்தை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், 2000ம் ஆண்டு 13 குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அந்த இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். தற்போது திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் புறம்போக்கு இடத்தில் இருப்பதாக கூறி அதிகாரிகள் எங்களை காலி செய்ய சொல்கின்றனர். எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட அந்த இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.