பொள்ளாச்சி, ஜூன் 4: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பின் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளி மற்றும் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான முழுவாண்டு தேர்வு முடிந்தவுடன், கடந்த ஏப்., 12ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை 9.30 மணிமுதல் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் வரிசையாக நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளுக்கு சென்றனர். நீண்டநாள் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளுக்கு வந்த சக மாணவர்கள், ஒருவர்கொருவர் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் இலவச பாட புத்தகமான முப்பருவ பாடத்திட்டத்தில், முதல்பருவ பாட புத்தகம் விநியோகிக்கப்பட்டது. அதுபோல் பெரும்பாலான பள்ளிகளில் நேற்று மாணவ, மாணவிகளுக்கு, சீருடை மற்றும் செருப்பு, பேக் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.