பொள்ளாச்சி. ஜூன் 4: பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தமிழக-கேரள எல்லையான கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று பொள்ளாச்சியில் இருந்து கேரளா நோக்கி சென்ற கேரள மாநில அரசு பஸ்சை கோபாலபுரம் சோதனை சாவடியில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்ய அப்துல் ஹக்கீம்(57), என்பவரிடம் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அப்துல் ஹக்கீம் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் என்றும், இவர் தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து கஞ்சாவை வாங்கி கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ஹக்கீமை, கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.