அந்தியூர், ஜூன் 4: பர்கூர் மலைப்பாதையில் விதிமுறைகளை மீறியும், உரிய ஆவணங்கள் இன்றி சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்ற புகார் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதன் பேரில் வாகனங்களை ஆய்வு செய்ய பவானி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி பர்கூர் மலைப்பாதையில் உள்ள தாமரைக்கரையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு சிமென்ட் பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் மற்றும் ரிக் வண்டிகளில் நடத்தப்பட்ட சோதனையில் வாகன வரி கட்டாமல் இருந்த மூன்று வாகனங்கள், அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான் , அதிக பாரம் ஏற்றி வந்த மூன்று வாகனங்கள் என ஆறு வாகனங்களுக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்களுடன், வாகன விபத்து ஏற்படாமல் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.