ஆத்தூர், ஜூன் 4: ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், முதல் நாளிலேயே மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேம்பாட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளி திறந்த முதல் நாளே, மாணவிகளுக்கு முதல் பருவத்திற்கான அனைத்து பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன. இதுகுறித்து மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறுகையில், ‘பள்ளி திறந்த முதல் நாளிலேயே அனைத்து பாட புத்தகங்களுக்கும் வழங்கப்பட்டதால், எங்களால் வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்களை உடனுக்குடன் படிக்க முடியும். தேர்விற்கு நல்ல முறையில் தயாராகவும் முடியும்,’ என்றனர். பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘பருவ பாட புத்தகங்கள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதால், எங்களால் வகுப்புகளில் திறம்பட பாடங்களை விளக்கி நடத்த முடியும்,’ என்றனர்.
இடைப்பாடி: இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் கே.ஏ. நாச்சியப்பாஅரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கரட்டூர் மணி தலைமையில், மாணவ,மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் 1152, மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கினார். இதேபோல், ஆட்டையாம்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 550, மாணவர்களுக்கு தலைமையாசிரியர் புத்தகங்கள் வழங்கினார். அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்னும் பாதி புத்தகங்கள் வரவில்லை. அதை உடனடியாக அனுப்பி வைக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.