திருமங்கலம், ஜூன் 4: திருமங்கலம் வெளியூர் பஸ்ஸ்டாண்டில் ஒழுங்கின்றி இஷ்டத்திற்கு நிறுத்தப்படும் பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வருகிறது. திருமங்கலம் - மதுரை ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் அருகே வெளியூர் பஸ்ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. மதுரையிலிருந்து சிவகாசி, நெல்லை, நாகர்கோவில், கோவில்பட்டி, சங்கரன்கோயில், செங்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருமங்கலம் வரும் டவுன்பஸ்கள் இந்த இடத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களை இறக்கிவிடுகின்றன.
மாட்டுத்தாவணியிலிருந்து பயணிகள் குறைவாக வரும் வெளியூர்பஸ்கள் அனைத்தும் திருமங்கலத்தில்தான் பயணிகளால் நிரம்புகின்றனர். எனவே, திருமங்கலம் வெளியூர் பஸ்ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்து வெளியூர் பஸ்கள் பொதுமக்களை ஏற்றுகின்றன. போட்டி போட்டுக் கொண்டு பயணிகளை ஏற்றுவதால் ஒழுங்குன்றி மதுரை ரோட்டில் இரண்டு வரிசை, மூன்றுவரிசை என போட்டு பஸ்கள் நிற்பதால் போலீஸ் ஸ்டேஷன் எதிரே எப்போதுமே கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
பல நேரங்களில் அரசு தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே முந்திசெல்வது யார் என்ற பலப்பரிச்சையும் நடப்பதால் நகருக்குள் வரும் பிறவாகனங்கள், மதுரை செல்லும் வாகனங்களுக்கு தேவையற்ற இடையூறுகள் உண்டாகிறது. ஒரு சில நாள்களில் மட்டுமே போலீசார் நின்று பஸ்களை ஒழுங்குபடுத்துகின்றனர். மற்றவேளைகளில் கடும் நெரிசலில் வெளியூர் பஸ்ஸ்டாண்ட் திணறிவருகிறது. இந்த பிரச்னைக்கு போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே திருமங்கலம் நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.