×

தென்காசியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

தென்காசி, ஜூன் 4:  நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள், நேற்று குற்றாலம் இசக்கி ரிசார்ட்சில் திடீரென ஆலோசனை நடத்தினர். மாநில நிர்வாகி இசக்கி சுப்பையா தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், வீரபுத்திரன், சாந்தசீலன், திருமலைக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் இசக்கி சுப்பையா நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் அமமுகவில்தான் இருக்கிறோம். வேறு எந்த கட்சிக்கும் செல்லும் எண்ணம் இல்லை. நடந்து முடிந்தது எலக்ட்ரானிக் மிஷின் தேர்தல், ஜனநாயக தேர்தல் இல்லை. சென்னையில் எங்கள் வீட்டில் மட்டும் 26 வாக்குகள் பதிவானது. ஆனால் எண்ணிக்கையின்போது வெறும் 10 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இது எப்படி என தெரியவில்லை.

கட்சியை விட்டு வெளியேறியவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். எங்களுக்கு வாக்களித்த மக்கள் அப்படியே உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறுவோம். புதிய மாவட்ட செயலாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை தலைமை அறிவிக்கும். தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும், என்றார். நேற்று மதியம் அமமுக நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில் நேற்றிரவு இசக்கி சுப்பையா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags : Inkasi ,executives ,Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து