×

பார் உரிமையாளர் தற்கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் மீதான நடவடிக்கை ரத்து

சென்னை, ஜூன் 4: திருப்போரூரை சேர்ந்த டாஸ்மாக் பார் உரிமையாளர் நெல்லையப்பன் என்பவர், போலீசாருக்கு அதிக மாமூல் கொடுத்ததால் கடனாளியாகி விட்டதாக கூறி மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவத்தில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜு, கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் சென்னை காவல்துறை தலைமையிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். மேலும் இந்த தற்கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. தில்லை நடராஜன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் மீது எந்த தவறும் இல்லை என்று கண்டறியப்பட்டதால் அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகளே முடிவு செய்து அறிக்கை தயாரித்தனர். இதையடுத்து இருவரும் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் பழைய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.


Tags : Bar owner cancellation ,suicide case inspector ,
× RELATED பார் உரிமையாளர் தற்கொலை வழக்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மீதான நடவடிக்கை ரத்து