சென்னை, ஜூன் 4: டாஸ்மாக் பார் உரிமையாளர் நெல்லையப்பன், போலீசாருக்கு அதிக மாமூல் கொடுத்ததால் கடனாளியானதாக கூறி மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம் எதிரே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவத்தில் மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜு, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் சென்னை காவல்துறை தலைமையிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
மேலும் இந்த தற்கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், எஸ்ஐ திருநாவுக்கரசு ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஏடிஎஸ்பி தில்லை நடராஜன் தலைமையில் விசாரணை நடந்தது. அதில், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்ஐ திருநாவுக்கரசு ஆகியோர் மீது எந்த தவறும் இல்லை என கண்டறியப்பட்டதால், அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் முடிவு செய்து அறிக்கை தயாரித்தனர். இதையடுத்து இருவரும் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் பழைய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.