×

பாப்பாரப்பட்டி பஸ் ஸ்டாண்டில் குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்

தர்மபுரி, மே 30: பாப்பாரப்பட்டி பஸ் ஸ்டாண்டில் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால், மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.பாப்பாரப்பட்டி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருக்கும் பொதுக்கழிப்பிடம் மற்றும் மாற்றுத்திறனாளி கழிப்பிடத்துக்கு அருகில், பிளாஸ்டிக் மற்றும் குப்பைக்கழிவுகள் தினசரி தீயிட்டு எரிக்கப்படுகிறது. அதனால் உருவாகும் நச்சுப்புகையால், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் மற்றும் பஸ் ஸ்டாண்டிற்கு பின்புறம் உள்ள பாரதிதாசன் தெரு, சுப்பிரமணிய சிவா தெருக்களில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள் மூச்சுத்திணறல் மற்றும் சுவாச பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குப்பைக்கழிவுகள் எரிப்பதால், பஸ் ஸ்டாண்டையொட்டி அமைந்துள்ள சந்தை வளாகத்திற்கு வரும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பாப்பாரப்பட்டி பஸ் ஸ்டாண்டில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், நச்சுப்புகை எழுந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்க வேண்டும். மக்காத குப்பைகளை எரிக்காமல் மறுசுழற்சி செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.


Tags : bus stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை