மணப்பாறை, மே 30: மணப்பாறை அருகே லெஞ்சமேடு வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா வாண வேடிக்கையுடன் கோலாகலத்துடன் நடந்தது. மணப்பாறை அருகேயுள்ள லெஞ்சமேடு வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினசரி அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குட விழா கடந்த 27ம் தேதி நடந்தது. இதனையொட்டி காலை முதல் ஏராளமான பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து, கிடா வெட்டி, முளைப்பாரியுடன் மாவிலக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான படுகளம் வேடபரி நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஊரின் மையப்பகுதியில் இருந்து துவங்கி கோயில் வரை ஊர்வலமாக சென்றது. அப்போது வீரமாகாளியம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தவாறு ஊர்வலம் செல்ல கிராம நாட்டாண்மை அழகர்சாமி தலைமையில், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கோலாட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் வண்ண வண்ண கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சி காண்பவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இத்திருவிழாவில் இளைஞர்களின் ஆட்டம், பாட்டம் என கிராமமே விழாக்கோலம் பூண்டது.