×

பள்ளி தலைமையாசிரியர்கள் பயோமெட்ரிக் முறை வருகை பதிவை உறுதிப்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை, மே 30: எமிஸ் (கல்வித் தகவல் மேலாண்மை முறைமை) இணையதளத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் விவரங்களை 100 சதவிகிதம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா அறிவுறுத்தினார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா பேசியதாவது: நிகழாண்டுக்கான 6ம் வகுப்பு, ஒன்பதாம்  வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது தமிழ் வாசிக்க செய்து ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு கற்பித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். மாணவர்களை பயன்படுத்தாமல் விழிப்புணர்வு பிரசாரம், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து அதிக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். அரசு பொதுத்தேர்வில் 80 சதவிகித தேர்ச்சிக்கு குறைவாக உள்ள மாணவர்களை தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களின் பெயர் பட்டியலை வழங்க வேண்டும். நீட் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

மாணவர்களுக்கு மனநல ஆலோசகராக ஒவ்வொரு பள்ளியிலும்  ஒரு சிறந்த ஆசிரியரை நியமிக்க வேண்டும். மன்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். எமிஸ் (கல்வித் தகவல் மேலாண்மை முறைமை) இணைய தளத்தில் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றை 100 சதவிகிதம் பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியர் தகுதித்தேர்வு அடுத்த மாதம் 8, 9ஆகிய தேதிகளில் நடைபெறுவதால் மையங்களாக செயல்படும் பள்ளிகளில் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். பள்ளி திறந்த நாளன்றே அரசிடம் இருந்து வரப்பெற்ற விலையில்லா புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை உரிய முறையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.ஆங்கில வழிக்கல்விக்கு குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வரும் ஜூன் 3ம் தேதி முதல் அனைத்து ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்வதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
கல்வி அலுவலர் வலியுறுத்தல்

Tags : school headmaster ,
× RELATED நாளை நடக்கிறது மேல்நிலைப்பள்ளி தலைமை...