×

புண்ணிய குளத்தில் கலக்கிறது கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறுமா?

பழநி, மே 30: பழநியில் கிடப்பில் கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழநி நகரம் 6.63 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 1993ம் ஆண்டு சுமார் 13 வார்டுகளின் மக்கள் பயன்பெறும் வகையில் 6 ஆயிரத்து 458 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்தில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையில் தற்போது அடைப்புகள் ஏற்பட்டும், பழுதடைந்தும், உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இக்கழிவுநீர் அனைத்தும் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி தற்போது வையாபுரி குளம் மற்றும் சிறுநாயக்கன் குளத்தில் கலக்கிறது. இதனால் புண்ணிய குளமாக கருதப்பட்டு வந்த வையாபுரி குளம் தற்போது மினி கூவமாக மாறி உள்ளது. எனவே, வையாபுரி குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க பழநி நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற வழக்கின் காரணமாக தற்போது நிறைவேற்ற முடியவில்லை. பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்ட மதிப்பீன்படி 93 ஆயிரத்து 174 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் குழாய் அமைக்கப்பட உள்ளது. 4 ஆயிரத்து 651 ஆர்.சி.சி வால் அமைக்கப்பட உள்ளது. லட்சுமிபுரம் மற்றும் மதனபுரம் ஆகிய இடங்களில் லிப்ட்டிங் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது.

பெரியப்பா நகர் மற்றும் வ.உ.சி பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் நீருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. 17 ஆயிரத்து 521 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக 2013-14ம் ஆண்டின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.15 கோடிக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதர நகராட்சி பங்குத்தொகையான ரூ.55.39 கோடியை தரும் அளவிற்கு நகராட்சியின் நிதி நிலைமை இல்லை. எனவே, முழு மானியமாக வழங்க நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற சிக்கல் விலகி, நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றால்தான் திட்டம் நிறைவேறும் என்றனர்.

Tags : pond pool ,
× RELATED புண்ணிய குளத்தில் கலக்கிறது கழிவுநீர்... பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறுமா?