×

ஏடாகூடமாக கேள்வியை கேட்டு ‘லஸ்ஸி’ கடையில் அசடு வழிந்த ஸ்மிருதி: கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

அமேதி: அமேதி சென்ற ஸ்மிருதி இரானி, அங்குள்ள லஸ்ஸி கடைக்காரரிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதிலால் அசடு வழிந்து கொண்டு திரும்பிய வீடியோ வைரலாகி வருகிறது. ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரும், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி எம்பியுமான ஸ்மிருதி இரானி, தனது சொந்த தொகுதியான அமேதியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை மற்றும் கணினி ஆய்வகத்தை திறந்து  வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில், ​​காந்தி (இந்திரா முதல் ராகுல் வரை) குடும்பத்தை விமர்சித்த அவர் ‘அமேதி தொகுதியில் வெற்றி பெற்றவர்களால், இத்தனை ஆண்டுகளாக மக்களுக்கு தண்ணீரை கூட வழங்க  முடியவில்லை’ என்று கூறினார்.பின்னர் அப்பகுதியில் செயல்பட்ட ‘லஸ்ஸி’ விற்பனை கடைக்கு சென்றார். அங்கிருந்த கடை உரிமையாளரிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். ஸ்மிருதி கடைக்காரரிடம், ‘காந்தி குடும்பத்திலிருந்து யாராவது இங்கு வந்திருக்கிறார்களா?’ என்றார். அதற்கு கடைக்காரர், ‘பிரியங்கா வந்தார்… ராகுல் வந்தார்… எல்லோரும்  வந்துவிட்டார்கள்…’ என்றார். கடைக்காரரின் பதிலை கேட்டு ஸ்மிருதி இரானி சிரித்தார். ஆனால், அவரால் கடைக்காரரின் கூறிய பதிலுக்கு எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியவில்லை. அவரைச் சுற்றி வேடிக்கைப் பார்க்க கூடியிருந்த கூட்டம், ‘உங்களுக்கு  அமேதியைப் பற்றி லேட்டாக தான் தெரிந்திருக்கிறது’ என்பது போல சிரித்தனர்.இந்த  பதிலை சற்றும் எதிர்பாராத ஸ்மிருதி இரானி, அஷ்ரபி லால் லஸ்ஸி கடையில்  கொடுத்த குளு குளு லஸ்ஸியை அசடு வழிய மடக் மடக்கென குடித்துவிட்டு  கிளம்பினார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதோடு, ஸ்மிருதி இரானியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் வெளியிட்டு, அவரது பங்கிற்கும் கிண்டலடித்துள்ளார்….

The post ஏடாகூடமாக கேள்வியை கேட்டு ‘லஸ்ஸி’ கடையில் அசடு வழிந்த ஸ்மிருதி: கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள் appeared first on Dinakaran.

Tags : Smriti ,Amethi ,Smriti Irani ,
× RELATED அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு