புதுச்சேரி, மே 30: புதுவை, ரெட்டியார்பாளையத்தில் உதவி பேராசிரியையிடம் 4 பவுன் நகையை வழிப்பறி செய்து பைக்கில் தப்பிய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுவை, மூலகுளம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 4வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர். இவரது மனைவி புவனேஸ்வரி (36). தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது குழந்தைகள் ஜெயா நகரில் உள்ள ஒரு டியூசன் சென்டரில் கோடை விடுமுறை சிறப்பு வகுப்புக்கு சென்று வருகின்றனர். நேற்றிரவு டியூசன் சென்டருக்கு சென்றிருந்த குழந்தைகளை அழைத்து வருவதற்காக புவனேஸ்வரி தனது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளார். அப்போது குண்டுசாலை, தனியார் பள்ளி அருகே அவர் சென்றபோது புவனேஸ்வரியை பின்தொடர்ந்து வந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஒருவன் கண்இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு மற்றொரு பைக்கில் காத்திருந்த கூட்டாளியின் வண்டியில் ஏறி தலைமறைவானார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புவனேஸ்வரி முறையிட்டார். வடக்கு எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மேற்பார்வையில் எஸ்ஐ வீரபத்திரன் தலைமையிலான ேபாலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்ட போலீசார், வழிப்பறி ஆசாமிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்தின்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்து தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.