உடன்குடி, மே 30: மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தண்டுபத்து மேலத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி(60). தொழிலதிபரான இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த சித்திரைலிங்கம் என்பவர் பராமரித்து வருகிறார். மாலை நேரத்தில் சென்று மின்விளக்கு போட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் வீட்டிற்கு சென்று மின்விளக்கு போட்டு சென்றார். நேற்று காலை சென்று பார்த்தபோது வீட்டு கதவை உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதேபோல் தண்டுபத்து அய்யாகோயில் தெருவில் ஆனந்த் மற்றும் லிங்கம், சுதாகர் ஆகியோர் வீடுகளிலும் மர்மநபர்கள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனந்த் உள்ளிட்ட 3பேரும் சென்னையில் வசித்து வருகின்றனர். ராமசாமி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல், மற்ற 3பேரின் வீடுகளிலும் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. அங்கு பணம் மற்றும் பொருட்கள் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
ராமசாமி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து சித்திரைலிங்கம், மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் இடம் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை தேடி வருகின்றனர். உடன்குடி மற்றும் மெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்த பெரும்பாலனோர் சென்னையில் தொழில் நிமித்தமாக வசித்து வருகின்றனர். இதனால் அவர்களது வீடுகளை நோட்டமிட்டு கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்குமுன் தண்டு பத்து பகுதியில் கொள்ளை மற்றும் ெகாள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்து வந்தன. இதனை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருந்ததால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவம் ஓரளவு குறைந்து காணப்பட்டது. மேலும் ரோந்து போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். காலப்போக்கில் ரோந்து பணி காணாமல் போய்விட்டது. போலீசாரின் அலட்சியமே கொள்ளை சம்பவம் நடைபெறுவதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.