சங்கரன்கோவில், மே 29: சங்கரன்கோவிலில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதையொட்டி மாலை 4 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவை கடந்தபோதும் பெரும்பாலான பகுதிகளிக்கு வரவில்லை. இதனால் நகரமே இருளில் மூழ்கியதாக மக்கள் குற்றம்சாட்டினர். அதே வேளையில் நகரில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் உள்ள பகுதிகளில் மட்டும் மின் இணைப்பு உடனே வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் கூறுகையில், மின்சாரம் தடைபட்டதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் அவதிப்படுகிறோம். 6 மணி நேரம் ஆகியும் மின்சாரம் இல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சங்கரன்கோவில் சுற்றுப் பகுதிகளில் கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகமாகி உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் மின்சாரம் இல்லாமல் இருப்பது பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது’’ என்றனர்.