×

ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளதால் ஆந்திர மக்களுக்கு இன்று முதல் நல்ல நாள் திருப்பதியில் நடிகை ரோஜா பேட்டி

திருமலை, மே 30: ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளதால் ஆந்திர மக்களுக்கு இன்று முதல் நல்ல நாள் தான் என்று திருப்பதியில் நடிகை ரோஜா கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்த நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது: பொய் வழக்குகளால் ஜெகன்மோகன் ரெட்டி கடும் இன்னலுக்கு உள்ளாகியிருந்தார். கடவுளின் ஆசிர்வாதத்தாலும் மக்களின் வாக்குகளாலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் 151 இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அதைவிட மிகவும் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

தேர்தல் வாக்குறுதியின் போது தெரிவிக்கப்பட்ட நவரத்தினா திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இன்று முதல் ஆந்திர மக்களுக்கு நல்ல நாள் என நான் கருதுகிறேன். ஆந்திர மாநிலத்தில் மதுவிலக்கு கட்டாயம் அமல்படுத்தப்படும்.
தேர்தல் வாக்குறுதிகளாக தெரிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி 202ம் ஆண்டு தேர்தலில் செய்த திட்டங்களை கூறி மக்களிடமிருந்து வாக்குகளை பெறுவோம். நகரி தொகுதியில் ஒரு முறை வெற்றி பெற்றவர் மீண்டும் வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது நகரி தொகுதி மக்கள் என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெற செய்துள்ளனர். எனது தொகுதி மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை கட்டாயம் நான் நிறைவேற்றி அந்த தொகுதியின் வளர்ச்சிக்காக செயல்படுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : JeganMohan Reddy ,Acting Chief Minister ,
× RELATED ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ரூ.529 கோடி...